கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தலின், நிபந்தனைகளை மீறிய, 9 பேரை அதிகாரிகள் நேற்று (21-03-2020) கைது செய்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் (MoPH) தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 9 நபர்களும் கத்தார் குடிமக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பொது சுகாதார அமைச்சகம் (MoPH) இது தொடர்பான ஒரு அறிக்கையில் கூறுகையில், நிபந்தனைகளை மீறிய நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுவதாக கூறியுள்ளது. மேலும், வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிபந்தனைகளை மீறும் ஒவ்வொருவரும் 2004 ஆம் ஆண்டின் தண்டனைச் சட்ட எண் (11) இன் பிரிவு (253), தொற்று நோய்களைத் தடுப்பது தொடர்பாக 1990 ஆம் ஆண்டின் சட்ட எண் (17) மற்றும் சமூகத்தைப் பாதுகாப்பது தொடர்பாக 2002 ஆம் ஆண்டிற்கான சட்ட எண் (17) ஆகிய விதிகளின் படி, நிர்ணயிக்கப்பட்ட அபராதங்களுக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று MoPH இன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.