கத்தாரில் வாழும் இந்தியர்களின் நலனை உறுதி செய்ததற்காக அமீருக்கு பிரதமர் மோடி பாராட்டு.!

Image Credits: India Tv

கத்தார் அமீர் H H ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் உரையாடினார்.

ஈத் அல் பித்ர் திருநாளையொட்டி அவருக்கும், நட்புணர்வுள்ள கத்தார் மக்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். COVID-19 தொற்று காலத்தில் கத்தாரிலுள்ள இந்தியக் குடிமக்களின் நலன்களை உறுதி செய்ய தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டதற்காக அமீருக்கு பிரதமர் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்தார்.

கத்தாரில் இந்திய சமுதாயத்தினரின் குறிப்பாக இந்திய சுகாதாரப் பணியாளர்களின் பங்களிப்புக்கு அமீர் பாராட்டு தெரிவித்தார். தற்போதைய நிலைமையில், இந்தியாவிலிருந்து கத்தாருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்கு எந்தவிதத் தடையும் ஏற்படக்கூடாது என்பதில் இந்திய அதிகாரிகள் செலுத்தும் கவனம் குறித்து பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மேலும், விரைவில் நாற்பதாவது பிறந்த நாளைக் காணவுள்ள கத்தார் அமீருக்கு, பிரதமர் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர் தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும், பல வெற்றிகளை அடையவும் தமது நல்வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Source : hindutamil