கத்தாரில் உயிரிழந்த கணவர் உடலை சொந்த நாட்டுக்கு கொண்டு வர மனைவி கோரிக்கை..!

கத்தார் நாட்டில் உயிரிழந்த தன் கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் விளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக கத்தாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்பி கட்டும் பணியை செய்து வந்துள்ளார்.

இவர் கடந்த 3 ஆம் தேதி தனது மனைவியிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தனக்கு பணி பிடிக்கவில்லை என்றும், விரைவில் சொந்த ஊருக்கு திரும்பி வர இருப்பதாகவும் பழனி தெரிவித்துள்ளார்.

அதற்குப் பிறகு, பழனியிடமிருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் சந்தேகமடைந்த பழனியின் மனைவி செல்வி மற்றும் உறவினர்கள், அவர் பணிபுரியும் நிறுவனத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்து உள்ளனர்.

அப்போது, பழனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பழனியின் மனைவி செல்வி, தனது கணவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பழனியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் பழனியின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

தகவல் : தமிழக ஊடகங்கள்.