வெளிநாட்டவர்கள் அதிகம் வேலை பார்க்கும் மத்திய கிழக்கு நாடுகளில் கத்தாரும் ஒன்று. இங்கு பணிபுரிபவர்கள் நாட்டை விட்டுச் செல்லும் போதும், நாட்டுக்குள் வரும் போதும், தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது.
தற்போது, இந்த விதிமுறையில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது கத்தார் அரசு. அதன்படி, கத்தாரில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களின் அனுமதி இல்லாமலேயே நாட்டுக்குள் வரவோ அல்லது வெளியே செல்லவோ முடியுமாம்.
மேலும், இந்த புதிய விதிப்படி, பணியாளர்கள் 72 மணி நேரத்திற்கு முன்னதாக தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் தெரிவித்தால் போதுமானது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், நிறுவனத்தின் டாப் 5 சதவீத பணியாளர்கள், அதாவது பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் பொருந்தாது. அவர்கள், நிறுவனத்திடம் முறைப்படி அனுமதி பெற்ற பிறகே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்து வேலைத் தேடி வருபவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச சம்பளம் என 200 அமெரிக்க டாலர்களை நிர்ணயித்துள்ளது கத்தார் அரசு.
இந்த செய்தியை, கத்தார் அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின் செயலர் முகம்மது அல் ஒபைத்லி (Mohamed al-Obaidly) அவர்கள் AFP பத்திரிக்கையிடம் கூறியுள்ளார். இது போல தொழிலாளர்கள் தொடர்பான பல மாற்றங்களை மேற்கொண்டு கொண்டு வர உள்ளதாம் கத்தார் அரசு.