தமிழ்நாடு, தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் துபாயில் பணியாற்றி வருகிறார்.
ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள காரணத்தால் அசாதாரணமான சூழல் நிலவுகிறது, இந்நிலையில் சதீஷ்குமார் அவசரமாக நாடு திரும்பியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதில் 27 வயது இளைஞரான சதீஷ்குமாருக்குத் தொடர்ந்து காய்ச்சல், சளி மற்றும் இருமல் இருந்துள்ளது.
உள்ளூர் மருத்துவரை அணுகியும் சரியாகவில்லை என்ற காரணத்தால் அவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரிடம் விசாரித்தபோது துபாயில் இருந்து சமீபத்தில் சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருப்பது தெரியவந்தது.
இதன் காரணமாக அவருக்குக் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்கிற சந்தேகம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்துக் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
அவருடைய ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதன் முடிவுகள் வந்த பின்னரே அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று தமிழக ஊடகங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளன.