கத்தாரில் சட்டவிரோதமாக மருத்துவ பொருட்களை விற்பனை செய்த ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவரை குற்றவியல் புலனாய்வு பொது இயக்குநரகத்தின், குற்றவியல் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
கத்தார் உள்துறை அமைச்சகம் (MoI), நேற்று (16-03-2020) வெளியிட்ட ஒரு அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர் மருத்துவ பொருட்களை சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார் என்று குற்றவியல் புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்தையடுத்து, தேவையான நடைமுறைகள் முடிந்தபின், அந்த நபர் கைது செய்யப்பட்டார் என்றும் மேலும், ஏராளமான மருத்துவ பொருட்கள் அவரிடம் இருந்தாக தெரிவித்துள்ளது.
இதில், 800 மருத்துவ கையுறைகள், 7,900 மருத்துவ முகமூடிகள் மற்றும் 1,502 மருத்துவ ஆடைகள் தவிர நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வெப்பமானிகள் மற்றும் 2,00,000 மதிப்புள்ள பணம் ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையில், அவர் நாட்டின் பல்வேறு மருந்தகங்களிலிருந்து இந்த பொருட்களை வாங்கி சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு மறு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார். தேவையான நடைமுறைகளை முடித்த பின்னர், அவர் சட்ட நடவடிக்கைகளுக்காக நாட்டின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுப்பப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், சமூகத்திற்கு சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய மீறல்களைப் புகாரளிக்குமாறு, அமைச்சகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.