கத்தாரில் வீட்டிலிருந்து வெளியேறும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம்; மீறினால் 2 லட்சம் அபராதம், 3 ஆண்டு சிறை.!

Image Credits: Qatar Day

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் கத்தார் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக ஏதேனும் காரணங்களுக்காக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது முகக்கவசம் (FaceMask) அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.

இந்த முடிவானது கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான H E Sheikh Khalid bin Khalifa bin Abdulaziz Al Thani அவர்களின் தலைமையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது மே மாதம் 17ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஓட்டுனர்கள் வாகனத்தில் தனியாக இருக்கும்போது தவிர, வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேறும்போது அனைத்து குடிமக்களும், குடியிருப்பாளர்களும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. மேலும், உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த முடிவுக்கு கட்டுப்படாத பட்சத்தில், தொற்று நோய்களைத் தடுப்பது தொடர்பான 1990ஆம் ஆண்டின் ஆணைச் சட்ட எண் 17இல் குறிப்பிடப்பட்டுள்ள அபராதங்களான மூன்று வருடங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை மற்றும் QR 2,00,000 ரியால்கள் அபராதம் அல்லது இந்த இரண்டு அபராதங்களில் ஏதேனும் ஒன்று விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: The Peninsula Qatar