கத்தார் நாட்டில் சூரி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைப்பு..!

சர்வதேச அளவில் பல இடங்களில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் இருப்பதால், வெற்றிமாறனின் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிக்க உள்ள புதிய படத்தின் புகைப்பட ஷூட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. மீரான் மைதீன் எழுதிய அஜ்னபி என்ற நாவலை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்குச் செல்பவர்களின் உணர்வூபூர்வமான ஆவணமாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. இந்நாவலை, திரைக்கதை ஆக்கியுள்ள வெற்றிமாறன் ஓமன், கத்தார், சவுதி ஆகிய அரபு நாடுகளில் படமாக்க உள்ளார். வெற்றிமாறன் வெளிநாட்டில் படமாக்கும் முதல் படமாக சூரி நடிக்கும் படம் அமைந்துள்ளது.

இந்த படத்திற்கான புகைப்பட ஷூட் நடந்துள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருந்தது. ஆனால் சர்வதேச அளவில் பல இடங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால், படக்குழுவினர் தற்காலிகமாக படப்பிடிப்பினைத் தள்ளி வைத்துள்ளனர் எனவும் நிலைமை சீரானதும் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Source : தமிழக ஊடகங்கள்.