கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் கத்தார் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக ஏதேனும் காரணங்களுக்காக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது முகக்கவசம் (FaceMask) அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.
இந்த முடிவானது கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான H E Sheikh Khalid bin Khalifa bin Abdulaziz Al Thani அவர்களின் தலைமையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த முடிவானது இன்று (17-05-2020) முதல் மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும்.
தனியாக வாகனத்தை ஓட்டி வரும் நபருக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு கட்டுப்படாத பட்சத்தில், தொற்று நோய்களைத் தடுப்பது தொடர்பான 1990ஆம் ஆண்டின் ஆணைச் சட்ட எண் 17இல் குறிப்பிடப்பட்டுள்ள அபராதங்களான மூன்று வருடங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை மற்றும் QR 2,00,000 ரியால்கள் அபராதம் அல்லது இந்த இரண்டு அபராதங்களில் ஏதேனும் ஒன்று விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.